ADDED : மார் 29, 2026 05:09 AM
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் உதயகுமார் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
நேற்று காலை மதுரை நகரில் இருந்து திருமங்கலத்தில் தேர்தல் பணிக்காக காரில் டி. குன்னத்துாரில் அவர் கட்டிய ஜெயலலிதா கோயிலுக்கு சென்றார்.
பின்னால் 5க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.
திருமங்கலம் ஆலங்குளம் அருகே பைபாஸ் ரோட்டில் உதயகுமார் காரை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். பின்னால் வந்த ஆதரவாளர்களின் கார்களையும் சோதனையிட்டனர்.
எதுவும் சிக்கவில்லை. இதைதொடர்ந்து ஜெ., கோயிலில் சோதனையிட பறக்கும் படையினர் திட்டமிட்டனர்.
என்ன நினைத்தார்களோ அத்திட்டத்தை கைவிட்டனர்.
சில நாட்களுக்கு முன் இக்கோயிலில் தி.மு.க., புகாரில் போலீசார் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
ஆளுங்கட்சி தரப்பு தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தி தங்களை கைப்பாவையாக கொண்டு தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள். ஆனால் தி.மு.க., வாகனங்களில் இது போன்ற சோதனைகள் எதுவும் செய்யவில்லை. நாங்கள் தேர்தல் விதிகளை பின்பற்றிதான் தேர்தல் பணியாற்றி வருகிறோம் ஆனால் ஆளுங்கட்சி தோல்வி பயத்தால் இதுபோன்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்றனர்.
