ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை உதயநிதி திறந்தார்
ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை உதயநிதி திறந்தார்
ADDED : ஜன 16, 2026 08:01 AM

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூரில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை துணைமுதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் நேரு, மகேஷ், செழியன், எம்.எல்.ஏ., அப்துல்சமது உள்பட பலர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து கோயில் காளைகளை அவிழ்த்து விட்டு துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
பொங்கல் திருநாளில் வீர விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சிக்கு பெருமை மலைக்கோட்டை, காவிரி ஆறு ஆகியவற்றுடன் சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒன்றாக உள்ளது. குளக்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு, இனி நிரந்தர அரங்கில் நடக்கும். தி.மு.க., ஆட்சி வந்த பின், இப்பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் வந்துள்ளது, 150 கோடி ரூபாய் மதிப்பில், ஒலிம்பிக் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரிங்ரோடு பணி, பஞ்சப்பூர் பஸ்ஸ்டாண்ட் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அலங்காநல்லுாருக்கு அடுத்தபடியாக, சூரியூரில் தான் ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளது. திராவிட மாடல் அரசு இன்னும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வர உள்ளது என்றார்.
திருச்சி ஜமால் முகமது கல்லுாரியில் அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டியையும் துணைமுதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். நாடு முழுவதும் இருந்து 80 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.

