மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்யும் திட்டம்; தாம்பூல தட்டு வழங்கி உதயநிதி துவக்கி வைப்பு
மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்யும் திட்டம்; தாம்பூல தட்டு வழங்கி உதயநிதி துவக்கி வைப்பு
UPDATED : நவ 11, 2025 10:48 AM
ADDED : நவ 11, 2025 06:50 AM

சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில்கள் சார்பில், 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியருக்கு 'சிறப்பு செய்யும் திட்டம்' தமிழகம் முழுதும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, 200 தம்பதியருக்கு தாம்பூல தட்டு வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பார்த்தசாரதி தெரு மற்றும் நல்லதம்பி தெருவில், 3.41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
நம்பர் ஒன்
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை மண்டலத்தில், 200 மூத்த தம்பதியர் உட்பட தமிழகம் முழுதும் 831 மூத்த தம்பதியருக்கு, இன்று சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, 2,500 ரூபாய் மதிப்புள்ள புத்தாடை, தாம்பூலத் தட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் 'நம்பர் ஒன் முதல்வர்' என, நம் முதல்வர் அழைக்கப்படுவதைப் போல், முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில், 'நம்பர் ஒன் அமைச்சர்' என்றால், அது அமைச்சர் சேகர் பாபு தான்.
இவர், துறை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தியுள்ளார். தற்போது நடத்தப்படும் நிகழ்ச்சி சற்று வித்தியாசமானது. பொதுவாக, மகன், மகள் அல்லது பேரன் திருமணத்தை, அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டி தலைமை ஏற்று நடத்தி வைப்பர்.
வாய்ப்பு
ஆனால், இந்த பேரனுக்கு, தாத்தா, பாட்டி திருமணத்தை நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருமணத்தின் போது தாத்தா, பாட்டியிடம் அனுமதி பெற்று, பேரனோ , மகனோ மாலை மாற்றுவர். இந்த மேடையில், பேரனிடம் அனுமதி பெற்று, தாத்தா, பாட்டி மாலை மாற்றிக் கொண்டனர். இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் ஸ்ரீ ராமானுஜ எம்பார் சுவாமிகள். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

