உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தொண்டன் போராடி பெற்றது: ரகுபதி
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தொண்டன் போராடி பெற்றது: ரகுபதி
ADDED : டிச 08, 2024 02:29 AM
புதுக்கோட்டை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் மன்னராட்சி நடத்துவதாக நடிகர் விஜய் கூறியிருக்கிறார். இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி.
அதுபோல, தி.மு.க.,வில் வாரிசு அரசியலும் கிடையாது. உழைத்துத்தான், கட்சியிலும் ஆட்சியிலும் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளனர்.
தி.மு.க.,வில் முதல்வர் ஸ்டாலினின் உழைப்பை ஒவ்வொரு தொண்டனும் ஏற்றுக் கொண்டுள்ளான். அதேபோலதான், உதயநிதியின் உழைப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என, தி.மு.க., தொண்டன் போராடினான். அப்படி கிடைத்த பதவி தான் அது.
மற்றபடி, வாரிசு என்ற அடிப்படையில் அவருக்கு அந்த பொறுப்பு போய் சேரவில்லை.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் குறித்து கேட்டதும், சினிமா செய்திகளுக்கு பதில் அளிப்பதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சினிமா செய்தி என்பது வேறு; சினிமா அரசியல் என்பது வேறு. அரசியல் என்றால், யாரும் யாருக்கும் உரிய பதில் சொல்லலாம்.
அரசியலை கடந்து பேசும்போது பதில் சொல்லத் தேவையில்லை. அரசியலில் விஜய் இன்னும் வளரவே இல்லை.
தமிழக அரசியலில், தி.மு.க., கூட்டணி மட்டும் தான், 48 சதவீத ஓட்டுகள் பெரும் அளவுக்கு வலுவாக உள்ளது.
வேங்கைவயல் சம்பவத்துக்காக, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவரும் விசாரித்துள்ளார்.
டி.என்.ஏ., மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைகளும் நடந்துள்ளன. விசாரணையும் முறையாக நடக்கிறது. யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
சீமானுடன் நேரடியாக மோதுவதற்கு அஞ்சுவதாக சொல்வது அபத்தம்.
புயல், மழை, வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக களத்துக்குச் சென்று பணியாற்றும் ஒரே இயக்கம் தி.மு.க., தான்.
எங்கள் அமைச்சர்கள் தான், களத்துக்கு ஓடோடி செல்கின்றனர். 'பெஞ்சல்' புயலுக்காகவும் பணியாற்றி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.