பதவி வாங்க காலில் விழவில்லை; பழனிசாமிக்கு உதயநிதி பதிலடி
பதவி வாங்க காலில் விழவில்லை; பழனிசாமிக்கு உதயநிதி பதிலடி
ADDED : அக் 22, 2024 03:32 AM
சென்னை: ''எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, தமிழக மக்கள் நலன் மீது எப்போதும் அக்கறை கிடையாது,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க.,வில் சீனியர்கள் பலர் இருக்கையில், அவர்களை 'ஓவர்டேக்' செய்து, எனக்கு துணை முதல்வர் பதவி தந்துள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியிருக்கிறார்.
கடந்த 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, அ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.
அப்போது, அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன், செம்மலை, சீனிவாசன் உட்பட பல சீனியர்கள் இருந்தனர். அவர்கள் எல்லாரையும் விட, மிக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் இருந்தார்.
அவர்கள் அனைவரையும் பின்னால் தள்ளி தாண்டிச் சென்று, பழனிசாமி எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார் என்பது, மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
அ.தி.மு.க.,வினர் கூவத்துாரில் அடித்த கூத்துகள், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் முன், பழனிசாமி தன் நிலையை உணர்ந்து பேச வேண்டும்.
அவரை போல் யாருடைய காலிலும் விழுந்து, நான் பதவி வாங்கவில்லை. அவருக்கு எப்போதுமே தமிழக மக்கள் நலன் மீது அக்கறை கிடையாது.
சமீபத்தில் மழை வெள்ளத்தில், சென்னை சிக்கி தவித்தபோது, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடாமல், சேலத்திற்கு பயணம் மேற்கொண்டவர் தான் பழனிசாமி.
அதுமட்டுமின்றி, ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியையும், ஆட்சியையும் அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டனர். நான் முதல்வர், நீ துணை முதல்வர் என பிரித்துக் கொண்டனர். அதைப்போல், கட்சியிலும் பதவிகளை பங்கிட்டுக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.