இன்று பயனாளிகளாக இருப்போர் 10 பேருக்கு உதவுபவராக உயரணும் உதயநிதி விருப்பம்
இன்று பயனாளிகளாக இருப்போர் 10 பேருக்கு உதவுபவராக உயரணும் உதயநிதி விருப்பம்
ADDED : நவ 28, 2025 06:25 AM

சென்னை: ''வெல்வோம் 200; படைப்போம் வரலாறு. இதுவே என் பிறந்த நாள் செய்தி,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதியின், 49வது பிறந்த நாள் விழா, தி.மு.க.,வினரால் நேற்று தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த விழாவில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உதயநிதிக்கு சீர்வரிசைப் பொருட்கள், தாம்பூலத் தட்டு, புத்தகம், பட்டாடை, வீணை, கருணாநிதி உருவச் சிலை, புகைப்படங்கள், பூங்கொத்து என, பரிசுப் பொருட்களை அளித்தனர்.
இதுபோல, சென்னை தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவில், உதயநிதி பங்கேற்று, மாணவ - மாணவியர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
இன்று நலத்திட்ட உதவி பயனாளர்களாக இருக்கும் நீங்கள், நாளை ௧௦ பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிலைக்கு உயர வேண்டும். அதற்கு தி.மு.க., அரசு துணை நிற்கும். தி.மு.க.,வினர் இதே எழுச்சியுடன் அடுத்த நான்கு, ஐந்து மாதங்கள் களத்தில் வேலை செய்ய வேண்டும்.
தற்போது, வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. முதலில் உங்கள் ஓட்டுரிமையையும், பின், நண்பர்கள், உறவினர்களின் ஓட்டுரிமையையும் உறுதி செய்யுங்கள்.
நமது 'டார்கெட்' தலைவர் ஸ்டாலின் சொன்னதுபோல், வெல்வோம் 200; படைப்போம் வரலாறு. அதுவே, என் பிறந்த நாள் வாழ்த்து செய்தி.
இவ்வாறு அவர் பேசினார்.

