துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு 'யுனெஸ்கோ' விருது
துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு 'யுனெஸ்கோ' விருது
ADDED : டிச 07, 2024 03:55 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் உள்ள, ஆபத்சகாயேஸ்வரர் கோவில், 1,300 ஆண்டுகள் தொன்மையானது. 7 ஏக்கரில் அமைந்துள்ள கோவில், ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டது. தொடர்ந்து குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோரால், கோவில் புனரமைக்கப்பட்டது.
இக்கோவிலில் எந்த ஆண்டு இறுதியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது என தெரியாமல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. 2023 செப்., 3ல் அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதற்கு முன், கோவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், 'யுனெஸ்கோ' எனும் ஐக்கிய நாடுகள் கல்வி மற்றும் கலாசார அமைப்பு சார்பில், பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு, ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு விருது நேற்று அறிவித்தது.
சிற்பங்கள் நிறைந்த இந்த கோவிலுக்கு, யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது, பெருமையாகக் கருதப்படுகிறது.
கோவில் செயல் அலுவலர் உமாதேவி கூறியதாவது:
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதற்காக, யுனெஸ்கோ சிறப்பு விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தக் கோவிலின் சிறப்புகளை உலகம் அறியும். சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனர் கோபிநாத் கூறியதாவது:
சோழர்கள் காலத்தில் கோவில் ராஜகோபுரம், திருச்சுற்று மாளிகை, விமானம் என எல்லாம் எப்படி இருந்ததோ, அதுபோன்றே பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பலரும் உழைத்துள்ளனர்.
குறிப்பாக கோவையைச் சேர்ந்த வசந்த்குமார் உறுதுணையாக இருந்தார். இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.