வீடு, தொழிற்சாலைகளுக்கு வருகிறது ஒரே மாதிரியான மின் கட்டண 'பில்லிங்'
வீடு, தொழிற்சாலைகளுக்கு வருகிறது ஒரே மாதிரியான மின் கட்டண 'பில்லிங்'
ADDED : டிச 28, 2024 08:11 PM
சென்னை:தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு நுகர்வோருக்கு, மின்னஞ்சலில் மின்கட்டண விபரம் தெரிவிப்பது போல, வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்தப் பிரிவிலும், 'டிஜிட்டல்' முறையை மட்டும் அமல்படுத்த, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறையும்; தொழிற்சாலைகளுக்கு மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.
அதன்படி, வீடுகளுக்கு மின் ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, மின்கட்டண விபரத்தை, நுகர்வோரிடம் உள்ள கணக்கீட்டு அட்டையில் எழுதி தருகின்றனர்.
பின், அலுவலக கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர். அடுத்த சில தினங்களில், மின் கட்டண விபரம் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் அனுப்பப்படுகிறது.
தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு மின் இணைப்புகளில் உள்ள மீட்டர்களில், தொலைத்தொடர்பு கருவி பொருத்தப்பட்டு, வாரியத்தில் உள்ள, 'சர்வர்' உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மாதந்தோறும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.
வீடுகளிலும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 3.03 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலை கேட்டதால், ஓராண்டாக டெண்டர் தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த பிரிவுகளுக்கு, ஒருங்கிணைந்த பில்லிங் முறையை அமல்படுத்த, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதை செயல்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்க, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள மின்கட்டண மென்பொருள், 2005ல் உருவாக்கப்பட்டது. தற்போது, நவீன வகையில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய மென்பொருட்கள் கிடைக்கின்றன.
அதற்கேற்ப, உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த பில்லிங் முறை ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான முன்னோட்டமாகவும் இருக்கும்.
இதன் வாயிலாக, ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோருக்கும் மாதந்தோறும் மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., வாயிலாக மட்டுமே மின்கட்டண விபரம் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.