பரந்துார் விமான நிலைய இடப்பிரச்னை மாநில அரசு கையில் தான் தீர்வு மத்திய அமைச்சர் வி.கே.சிங் சொல்கிறார்
பரந்துார் விமான நிலைய இடப்பிரச்னை மாநில அரசு கையில் தான் தீர்வு மத்திய அமைச்சர் வி.கே.சிங் சொல்கிறார்
ADDED : ஜன 24, 2024 12:10 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷனில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும், 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற விழிப்புணர்வு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்றார்.
பா.ஜ. எம்.எல்.ஏ. நயினார்நாகேந்திரன், மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். பாரதத்தை வளர்ச்சி அடைந்த தற்சார்பு மிக்கதாக்குவதற்கான உறுதிமொழியை அவர்கள் ஏற்றனர்.
பின், வி.கே.சிங் கூறியதாவது:
மத்திய அரசின் நோக்கம் விளம்பரத்திற்காக அல்ல. ஒரு வாகனத்தின் அனைத்து உதிரிபாகங்கள் ஒன்று சேர்ந்தால் தான் இயங்கும் என்பதை போல மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும்.
துாத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் விமான நிலையத்தின் முழு பணிகளும் நிறைவடையும்.
பரந்துார் விமான நிலையத்திற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை; தமிழக அரசு தான் தேர்வு செய்தது. அங்கு விவசாயம் நடக்கும் பகுதிகள் என மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே, சரியான இடத்தேர்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

