சென்னையில் இடிந்து விழுந்த 3 மாடி... அலறியடித்து ஓடிய மக்கள்!
சென்னையில் இடிந்து விழுந்த 3 மாடி... அலறியடித்து ஓடிய மக்கள்!
ADDED : நவ 11, 2024 06:04 PM

சென்னை; சென்னையில் பயன்பாட்டில் இல்லாத சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பிராட்வே பகுதி எப்போதும் பரபரப்பான பகுதியாகும். இங்கு சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டிடம் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு 3 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை.
சிதிலம் அடைந்த, ஆங்காங்கே விரிசல்களுடன் கட்டிடம் காட்சி அளித்தது. இதன் காரணமாக அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந் நிலையில் அந்த 3 மாடி கட்டிடம் திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
முழு கட்டிடமும் சுற்றுச்சுவருடன் சேர்த்து இடிந்து விழ. அப்போது அவ்வழியாக சென்ற 3 பேர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
சம்பவ பகுதியில் மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள், காயம் அடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடுகளில் யாரேனும் உள்ளனரா என்று ஆய்வு நடத்தினர். கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரள ஆரம்பித்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியில் யாரும் நுழையாத வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்திய தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.