ADDED : ஜன 22, 2024 07:02 AM

'கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் போது, பகுதி வாரியாக அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என, நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில், 2020ம் ஆண்டு நிலவரப்படி, 12,620 ஆக இருந்த கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை, தற்போது, 12,524 ஆக குறைந்துள்ளது. புதிதாக நகர்ப்புற உள்ளாட்சிகளை உருவாக்கும் நடவடிக்கையால், கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
அரசியல் சட்ட திருத்தத்தின் அடிப்படையில், சிறப்பு அதிகாரத்துடன் செயல்படும் ஊராட்சிகளின் நிர்வாகத்தில், அடுத்த நிலையில், 381 ஒன்றியங்கள் உள்ளன.
ஊராட்சிகளுக்கு கட்சி சார்பற்ற முறையில் தான் உறுப்பினர்கள், தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதிகள் இருந்தாலும், பெரும்பாலும் அரசியல் பிரமுகர்கள் தான் இப்பதவிகளை பிடிக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையில், ஊராட்சிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. நகர்ப்புற வளர்ச்சியின் தாக்கத்தால், ஊராட்சிகளை தரம் உயர்த்தும் பணிகள், அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், 2019ல் தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. அதனால், எந்தெந்த பகுதிகள் தொடர்ந்து ஊராட்சியாக இருக்க வேண்டும்; எந்த பகுதிகள் நகர்ப்புற உள்ளாட்சியாக மாற வேண்டும் என்பதை, அரசு முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆய்வு அவசியம்
இது குறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:
கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. கிராம சபை நடத்தி ஒருமனதாக நிறைவேற்றப்படும் தீர்மானம், மிக வலிமையானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த அதிகாரம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு பகுதி நிர்வாக ரீதியாக ஊரக உள்ளாட்சியாக இருந்தாலும், அதில் நகர்ப்புற தன்மை அதிகரிக்கும் போது, அதை கிராம ஊராட்சியாக வைத்திருப்பது நல்லதல்ல. இதுபோன்ற பகுதிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளாக தரம் உயர்த்த வேண்டியது அவசியம்.
சென்னை பெருநகர் பகுதி என்று வரையறுக்கப்பட்ட பரப்பளவில், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை தான் சி.எம்.டி.ஏ., செயல்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேநேரம், நகரங்களின் விரிவாக்க பகுதியில், ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக ஆய்வு செய்து, அதன் தன்மை அடிப்படையில் தரம் உயர்த்த வேண்டும். ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் காணப்படும் குறைபாடுகளையும் தீர்க்க, அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றம் நல்லது
ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
நகர்ப்புற தன்மையுடன் கட்டுமான திட்டங்கள் அதிகரிக்கும் இடங்களை, ஊராட்சியாக வைத்திருக்க கூடாது. இதுபோன்ற இடங்களை தேவை அடிப்படையில் தரம் உயர்த்துவது அவசியம்.
ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளாக மாற்றுவதால், வரி அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. வளர்ச்சி ஏற்படும் போது, இதுபோன்ற விஷயங்களை ஏற்க மக்கள் தயாராகி விடுகின்றனர்.
எனவே, கட்டுமான திட்ட அனுமதி, புதிய நகரங்கள் உருவாவதை முறைப்படுத்துதல் அடிப்படையில், இதை அணுக வேண்டும். இதில், ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றும் நிலையில், பேரூராட்சிகளின் நிர்வாக செயல் திறன் மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -