UPDATED : மே 28, 2025 04:14 AM
ADDED : மே 28, 2025 12:12 AM

சென்னை: ''பொதுவெளியில் வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் சாந்தி தெரிவித்தார்.
அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு வெற்றியை கொண்டாடும் வகையில், 'கடந்து வந்த பாதையும், செல்ல வேண்டிய தொலைவும்' என்ற பெயரில், 'ஒன்று கூடல் நிகழ்ச்சி' சென்னையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், சாந்தி பேசியதாவது:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றியை வரவேற்கிறோம். இதுபோல, தமிழகம் முழுதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளில் நீதி கிடைக்கும் வரை, நாங்கள் போராட்டத்தை முன் வைப்போம். பொதுவெளியில் வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு, பாலியல் தொடர்பான கல்வியை அடிப்படையாக்க வேண்டும். அப்போது தான், பாலியல் குற்றங்கள் குறையும். இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

