அமெரிக்க வரி உயர்வு பிரச்னை விரைவில் தீர்வு காண நடவடிக்கை: துணை ஜனாதிபதி உறுதி
அமெரிக்க வரி உயர்வு பிரச்னை விரைவில் தீர்வு காண நடவடிக்கை: துணை ஜனாதிபதி உறுதி
ADDED : ஜன 24, 2026 07:10 AM

திருப்பூர்: ''அமெரிக்க இறக்குமதி வரி உயர்வு பிரச்னைக்கு, போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவராக பொறுப்பேற்றுள்ள சக்திவேல், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, இந்திய ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறித்தும், அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இந்திய ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்கா பெரும் பங்களிப்பை கொண்டுள்ளது. சந்தை வாய்ப்புகளை தக்கவைக்க வரி உயர்வு பிரச்னைக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். இரண்டாம் கட்டமாக, 25 சதவீதம் வரி விதிக்கப்பட்ட பிறகு, ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சீர்குலைந்துள்ளது. தொழிலாளர் வேலை இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். இந்திய ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க வர்த்தகத்தை தக்க வைக்க, 25 சதவீதம் வரை, இறக்குமதி வரி உயர்வை பகிர்ந்துகொண்டு, நஷ்டத்தில் இயங்கி வருகின்றனர்.
இதேநிலையில் தொடர முடியாது என்பதால், ஆர்டர்களை ஏற்க முடியாமலும் கைவிட்டுள்ளனர். புதிய நாடுகளை அணுகி, மாற்று சந்தைகளை கைப்பற்றி வர்த்தகம் செய்ய, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகும். அமெரிக்க சந்தையில் ஏற்பட்டுள்ள இழப்பை, போட்டி நாடுகள் கைப்பற்றினால், அவற்றை மீண்டும் இந்தியாவை நோக்கி திருப்புவது மிக மிக கடினம்; மீண்டு வர முடியாத அளவுக்கு, வர்த்தக இழப்பு பாதிப்பு ஏற்படும்.
எனவே, இந்தியா- - அமெரிக்கா இடையே, புதிய வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் வரை, ஏற்றுமதியாளர்களுக்கு, தகுந்த இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் சில மாதங்கள் தாமதித்தாலும், இந்திய ஏற்றுமதி வர்த்தகம் கடும் பின்னடைவை சந்திக்கும்.
ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான பாதிப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து, துணை ஜனாதிபதியிடம் நேரில் விளக்கினேன். அனைத்து கோரிக்கைகளையும், கனிவுடன் கேட்டறிந்த துணை ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன், இதுகுறித்து ஆலோசித்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

