திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிபதிகள் மீது வைகோ கடும் விமர்சனம்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிபதிகள் மீது வைகோ கடும் விமர்சனம்
ADDED : ஜன 13, 2026 08:08 PM

மதுரை : “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு, நீதிபதிகள் எல்லை மீறியுள்ளனர்,” என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.
திருச்சியில் ஜன., 2ல் துவங்கிய வைகோவின் நடைபயணம் மதுரையில் நேற்று இரவு முடிந்தது.
அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தர்கா உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், மதுரையில் ஒரு நீதிபதி, மலை மீதுள்ள துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டு, எல்லை மீறிவிட்டார். அவர் உட்பட மூன்று நீதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் எதற்கும் அஞ்சுபவன் அல்ல. துணிச்சலுடன் சொல்கிறேன். மதுரை திருமங்கலத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காகவும், இந்திய அரசை குற்றம் சாட்டியதற்காகவும் தேசத்துரோக வழக்கை நான் சந்தித்தேன். என் கருத்துக்களில் உறுதியாக இருப்பேன். தமிழகத்தில் மதவாதக் கொட்டம் ஒடுக்கப்படும்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, தி.மு.க.,வை துடைத்து எறிவோம் என்கிறார். அவருக்கு என்ன திமிர், ஆணவம் இருந்தால் அவ்வாறு பேசியிருப்பார். தி.மு.க., எக்கு கோட்டை; யாராலும் அழிக்க முடியாது. ஆட்சியில் நான் பங்கு கேட்கவில்லை என்றால், வைகோவிற்கு பதற்றம் என்கின்றனர். இதுகுறித்து கிண்டல் செய்கின்றனர். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

