'வந்தே பாரத்' ரயில்கள் வலுவான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை கம்யூ., - எம்.பி., புகாருக்கு ரயில்வே விளக்கம்
'வந்தே பாரத்' ரயில்கள் வலுவான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை கம்யூ., - எம்.பி., புகாருக்கு ரயில்வே விளக்கம்
ADDED : ஏப் 23, 2025 12:44 AM
சென்னை:'வந்தே பாரத் ரயில்கள் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு, தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை, எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆணையர் அறிக்கை
இந்நிலையில், மதுரை எம்.பி.,யான வெங்கடேசன், தன், 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'பசு மாடு முட்டினால் கூட, வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்கு உள்ளாகும். வந்தே பாரத் ரயிலின் முதல் கோச், சாதா ரயில்களை விட, எடை குறைவு என, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை அளித்துள்ளார்.
வந்தே பாரத்துக்கு காவி நிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை, பயணியரின் பாதுகாப்பில் காட்டுங்கள் ரயில்வே அமைச்சரே' என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, 'செமி ஹை ஸ்பீடு' வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள், பயணியருக்கு நவீன மற்றும் வசதியான ரயில் பயண அனுபவத்தை வழங்கி வருகின்றன. அதிவேகம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தர நிலைகள், உலகத்தரம் வாய்ந்த சேவை போன்றவை இந்த ரயிலின் தனிச்சிறப்புகளாகும்.
வந்தே பாரத் ரயில்கள், வலுவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த வகை ரயில்களில், 'கவச்' பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், நவீன இணைப்பு வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன.
வேலி அமைப்பு
இந்த ரயில்களின் முகப்பு பகுதிகளில், கால்நடைகள் மோதும் போது, ரயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
மோதினால், துாக்கி வீசும் வகையிலான திறன் உடைய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் குறுக்கே ஓடுவதை தடுக்க, இந்திய ரயில்வே, நாடு முழுதும் ரயில் தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில், வேலி அமைத்து வருகிறது. இதுவரை 3,500 கி.மீ.,க்கு வேலி அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.