கொலை வழக்கில் 2 ஆண்டில் தீர்ப்பு; தி.மு.க., அரசின் விரைவான செயல்பாடு
கொலை வழக்கில் 2 ஆண்டில் தீர்ப்பு; தி.மு.க., அரசின் விரைவான செயல்பாடு
ADDED : டிச 31, 2024 09:12 AM
சென்னை: 'சி.பி.ஐ., விசாரணையில் இருக்கும், 2019ல் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், எந்த முடிவும் தெரியாத சூழலில், 2022ல் நடந்த கொலை குற்றத்தில், இரண்டே ஆண்டில் தண்டனை கிடைக்கும் வகையில், தி.மு.க., அரசு செயல்பட்டுள்ளது' என, அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதால், குற்ற செயல்கள், கடந்த ஆட்சியில் இருந்ததை விட குறைந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத் தரும் வகையில், தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது.
கடந்த 2022 அக்., 13ல், ஒருதலை காதலை ஏற்க மறுத்த, கல்லுாரி மாணவி சத்தியப்பிரியாவை, மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளி சதீசுக்கு மரண தண்டனை விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2022 அக்டோபரில், குற்ற சம்பவம் நடந்த உடனே, குற்றவாளி சதீஷ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டான். தமிழகத்தின் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 70 சாட்சிகளை வழக்கில் இணைத்து, குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களை, உரிய வகையில் திரட்டி, நீதிமன்றம் முன் குற்றவாளியை நிறுத்தினர்.
சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், சாட்சிகள் மற்றும் இதர விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்து, 25 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலைக்குற்ற வழக்கில், இவ்வளவு விரைவாக நீதி பெற்றுக் கொடுத்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக, தி.மு.க., அரசு திகழ்கிறது. மத்திய அரசின் சி.பி.ஐ., விசாரணையில் இருக்கும், 2019ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்னும் எந்த முடிவும் தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில், 2022ம் ஆண்டு நடந்த கொலை குற்றத்திற்கு, இரண்டே ஆண்டில், தண்டனை கிடைக்கும் வகையில், தி.மு.க., அரசு செயல்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.