ADDED : மார் 17, 2024 03:44 AM
சென்னை : அ.தி.மு.க., கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிட கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும், விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, பிரதான மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், வழக்கின் தீர்ப்பை நாளை நீதிபதி சதீஷ்குமார் வழங்குகிறார்.

