கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பை கோர்ட் உறுதி செய்ய வேண்டும்!
கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பை கோர்ட் உறுதி செய்ய வேண்டும்!
UPDATED : ஜூலை 01, 2025 10:19 PM
ADDED : ஜூலை 01, 2025 12:48 PM

சிவகங்கை: போலீஸ் விசாரணையில் உயிரிழந்த, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் சரமாரியாக தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வழக்கில், வீடியோ முக்கிய சாட்சியமாக கருதப்படும் என்பதால், வீடியோ எடுத்தவரின் பாதுகாப்பை கோர்ட் உறுதி செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது, அஜித்குமார், போலீசாரால் சரமாரியாக தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவை அஜித்குமார் குடும்பத்தினர் வெளியிட்டு உள்ளனர். வீடியோவில் அஜித்குமாரை போலீசார் சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஜன்னல் வழியாக ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை திருப்புவனம் மாஜிஸ்திரேட் இன்று மாலை 3 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் இன்று மாலை 3 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கோர்ட்டில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையே அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் இன்று மதியம் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவர் இன்று கோர்ட்டில் ஆஜரானார். தான் 15 வினாடிகள் வீடியோ எடுத்ததாகவும், அதன் பிறகு பயம் காரணமாக அங்கிருந்து ஓடி விட்டதாகவும் தெரிவித்தார்.