ADDED : பிப் 12, 2025 07:52 PM
திருவண்ணாமலை:''உடல் கொழுப்பு, வாய் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பண கொழுப்பு கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதுதான் விஜய்க்கு உள்ளது. அதனால் தான், பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்துள்ளார்,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
வழக்கில் ஆஜராவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றம் வந்த சீமான், அளித்த பேட்டி:
மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருகிறேன். பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தில் எத்தனை ஆறு, ஏரி, குளம், எத்தனை சமூக மக்கள், எந்த சமூக மக்களுக்கு பிரச்னை என்ன என அவருக்கு தெரியாது. உடல் கொழுப்பு, வாய் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பண கொழுப்பு கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதுதான் விஜய்க்கு உள்ளது. அதனால் தான், பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து வியூக வகுப்பாளர் ஆக்கி உள்ளார். இதையெல்லாம் பேசினால், கோபம் தான் வருகிறது.
தைப்பூச விழாவிற்கு வழக்கம் போல், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்டவர், பழனியில் ஏன் முருகனுக்கு மாநாடு நடத்தினார்?
இந்த மண்ணின் மக்கள், நல்ல அரசியலை விரும்புகிறவர்கள், ஊழல், லஞ்சமற்ற, துாய நிர்வாகத்தை விரும்புகிற மக்கள், கவலை, கண்ணீரோடு வீதியில் நின்று போராடும் மக்கள் ஆகியோரோடுதான் நான் கூட்டணி வைத்திருக்கிறேன்.
மற்ற கட்சி தலைவர்களையோ, வியூக வகுப்பாளர்களையோ நம்பி கட்சி ஆரம்பிக்கவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

