தி.மு.க.,வை கண்டு விஜய் பயப்படுகிறார்: அமைச்சர் முத்துசாமி புது விளக்கம்
தி.மு.க.,வை கண்டு விஜய் பயப்படுகிறார்: அமைச்சர் முத்துசாமி புது விளக்கம்
ADDED : டிச 09, 2024 04:39 AM

ஈரோடு : ''த.வெ.க., தலைவர் விஜயின் கருத்து தி.மு.க.,வை நோக்கி இருக்கிறது. அதனால், அவர் தான் தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தம்,'' என, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: ஒவ்வொரு கட்சியிலும் யாராவது பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தி.மு.க.,வுக்கு விஜய் எச்சரிக்கை விடுப்பதாக சொல்வது, அவர் தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தமாகிறது. இதுபோன்று பேசக்கூடாது என அவரை கண்டிக்க முடியாது. கட்சி துவங்கி தன் கருத்தை தெரிவிக்கிறார். அவரின் கருத்து தி.மு.க.,வை நோக்கி இருப்பதால், தி.மு.க.,வை பார்த்து அவர் பயப்படுவதாகவே அர்த்தம். தி.மு.க., வலுவாக உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் இதை நிரூபித்தோம்; 2026 சட்டசபை தேர்தலிலும் நிரூபிப்போம். தி.மு.க., செயல்பாடுகளை பார்த்தால் அம்பேத்கர் சந்தோஷமடைவார். தி.மு.க.,வுக்குள் யார், எந்த ஜாதி என்பது தெரியாது. அந்தளவுக்கு சகோதரர்களாக பழகி வருகிறோம்.
மிக் ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு, பெஞ்சல் புயலால் பாதித்த மக்களை விட அதிகளவில் நிவாரண தொகை வழங்கப்பட்டது என்பது சரியல்ல.
நிவாரண பொருட்களை எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்று கணக்கெடுத்து சொன்னால் சரியாக இருக்கும். புயல் - மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ வேண்டுமே தவிர, ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.