தி.மு.க., அரசின் ஊழல் வித்தை இனி செல்லாது: தேர்தல் பிளான் தவிடுபொடியாகும் என்கிறார் விஜய்
தி.மு.க., அரசின் ஊழல் வித்தை இனி செல்லாது: தேர்தல் பிளான் தவிடுபொடியாகும் என்கிறார் விஜய்
ADDED : மார் 17, 2025 01:32 AM

சென்னை: 'எத்தனை கோடிகளை கொட்டினாலும், தி.மு.க., அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது; 2026 சட்டசபை தேர்தலில், இந்த அரசை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவர்' என, த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் முழுதும் தி.மு.க., அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய நிறுவனங்களில், கடந்த 6ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் பணியாளர்களை பணி அமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, 'பார்' உரிமம் வழங்கும் டெண்டர், கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும், 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் தொகை வசூல் என, பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
இதை பார்க்கையில், முறைகேடு செய்வதில் அனுபவம் வாய்ந்த, கைதேர்ந்த மற்றும் நுட்பமான மூளைகளால் மட்டுமே, இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அர்த்தம் கொள்ள தோன்றுகிறது.
டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பண மோசடி குறித்து, அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ள வார்த்தைகளை பார்த்தால், தி.மு.க., அரசு குறித்து, ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை, பெருமையாக பறைசாற்றும் இதே அரசு தான், மக்களை மதுவுக்கு அடிமையாக்கும், மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்து முறைகேடு நடந்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது.
ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே, தி.மு.க.,வின் ஆட்சி அதிகார வரலாறு. இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால், டாஸ்மாக் முறைகேட்டில், சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும், இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.
இதுபோன்ற முறைகேடுகள் வழியே ஈட்டப்பட்ட பணம் தான், 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்பு சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல.
எத்தனை கோடிகளை கொட்டினாலும், தி.மு.க., அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது. இவர்களை, 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவர்.
இவ்வாறு அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.