ADDED : அக் 05, 2025 01:40 AM

சென்னை: அரசியல் களத்திலிருந்து விஜயை அகற்ற சதி நடப்பதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது பேட்டி:
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்திருப்பது, இதுவரை நடக்காதது.
ஒரு வாரமாகியும் இது பற்றிய உண்மைகள் வெளிவரவில்லை. இதற்கு விஜய் மட்டுமே பொறுப்பு என்று, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, விஜயை அரசியல் களத்திலிருந்து அகற்ற வேண்டும்; அவரை காலி செய்ய வேண்டும் என, தீய நோக்கத்தில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
விஜய், ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; பிரபல நடிகர். எனவே, அவரை பார்க்க கட்சி சாராதவர்களும் வருவர்.
இதை உணர்ந்து, அதற்கேற்ற இடத்தை, காவல் துறை ஒதுக்கியிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் பேச வேண்டும் எனக் கூறி, விஜய் வாகனத்தை காவல் துறை கொண்டுச் சென்றுள்ளது.
கரூரில் இருந்து, விஜய் தானாக வெளியேறினாரா அல்லது காவல் துறை சொல்லி வெளியேறினாரா என்பது தெரிய வேண்டும். விஜய் வீடியோ வாயிலாக பேசாமல், நேரில் வந்து பேச வேண்டும்; அவர் மவுனம் கலைக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில், அதிக அளவில் தொழில் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும். அப்படி வரும் நிறுவன வேலைவாய்ப்புகளில், உள்ளூர் மக்களுக்கு அதிகம் வழங்க வேண்டும்.
இதற்கு சட்டம் இயற்ற வலியுறுத்தி, வரும் 16ம் தேதி துாத்துக்குடியிலும், 18ம் தேதி விருதுநகரிலும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.