அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: ஏ.சி.சண்முகம்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: ஏ.சி.சண்முகம்
ADDED : அக் 25, 2025 06:19 AM

சென்னை: ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்,'' என, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கிண்டியில், சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய பின், அவர் அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே, கடந்த 25 ஆண்டுகளாக, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இருக்கிறது.
வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., கூட்டணியில் தொடர்வோம். நடிகர் விஜயின் த.வெ.க.,வும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும்.
அப்படி வந்தால், பலமான கூட்டணியாக இருக்கும்; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜ., கூட்டணிக்கு விஜயை வரவேற்கிறோம்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், மருது சகோதரர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இதுபோல, திருப்பூர் குமரனுக்கும் அங்கு சிலை அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டில்லியில், பழைய பார்லிமென்ட் கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு, மருது சகோதரர்கள் சிலை வைக்க வேண்டும். அவர்கள் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

