வி.ஐ.டி., வேந்தர் கோ.விசுவநாதனுக்கு உயர்தனி செம்மல் விருது
வி.ஐ.டி., வேந்தர் கோ.விசுவநாதனுக்கு உயர்தனி செம்மல் விருது
UPDATED : ஜூலை 10, 2025 01:50 PM
ADDED : ஜூலை 10, 2025 12:18 AM

சென்னை:வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சார்பில், 'உயர்தனிச் செம்மல்' விருது வழங்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள, 70க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் இணைந்து, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை என்ற அமைப்பாக செயல்படுகின்றன. இந்த அமைப்பு, கடந்த 38 ஆண்டுகளாக, தமிழ் மொழி, பண்பாடு, மரபு, கலை, இலக்கியம், தொழில் வளர்ச்சியில் பங்காற்றுகிறது.
மேலும், உலகத் தமிழர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், மாநாட்டையும் நடத்துகிறது. அந்த வகையில், இந்த அமைப்பு, சமீபத்தில் அமெரிக்காவின் வடகரோலினாவில் உள்ள ராலேவில் நடத்திய நிகழ்ச்சியில், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, 'உயர்தனிச் செம்மல்' விருது வழங்கி கவுரவித்துள்ளது.
வேலுார் வி.ஐ.டி., பல்கலை, சர்வதேச அளவில் உயர் கல்வியில் செய்த சிறப்பான சேவையை பாராட்டி, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை சார்பில், வி.ஐ.டி., வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, 'உயர்தனிச் செம்மல்' விருது வழங்கப்பட்டது. உடன், வி.ஐ.டி., துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், பன்னாட்டு உறவுகளுக்கான இயக்குநர் ஆர்.சீனிவாசன் மற்றும் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகிகள்.