ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்கம் 'டல்' மேலும் 10 நாட்கள் காலநீட்டிப்பு
ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்கம் 'டல்' மேலும் 10 நாட்கள் காலநீட்டிப்பு
ADDED : அக் 16, 2025 02:10 AM
மத்திய அரசையும், தேர்தல் கமிஷனையும் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பாக, ஓட்டு திருட்டு தடுப்பு கையெழுத்து இயக்கம், செப்., 15ல், தமிழகம் முழுதும் துவக்கப்பட்டது.
'இரண்டு கோடி கையெழுத்து லட்சியம்; ஒரு கோடி கையெழுத்து நிச்சயம்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
செப்., 15ல் துவங்கி, அக்., 15க்குள் கையெழுத்து வேட்டையை முடித்து விட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, அழகிரி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில், மண்டல வாரியாக, ஐவர் குழு நியமிக்கப்பட்டது.
தேசிய அளவில், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் கையெழுத்து கிடைக்கும் என, டில்லி மேலிடம் எதிர்பார்த்தது.
ஆனால், கையெழுத்து பெற்றோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக்கூட எட்டவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஐவர் குழுவினர், மாவட்டத் தலைவர்களுக்கு 'டோஸ்' விட்டுள்ளனர்.
கையெழுத்து பெறாமல், 'டிமிக்கி' கொடுக்கிற மாவட்டத் தலைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட, மாவட்டத் தலைவர்கள் விருப்ப மனு வழங்கினாலும், அவரது தலைமையில் நடந்த கையெழுத்து இயக்க பணிகளும், அளவுகோலாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து இயக்கத்தை நேற்றுடன் முடித்து விட வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போதிய கையெழுத்து வராததால், 'மேலும் 10 நாட்களுக்கு, கையெழுத்து இயக்கம் நீட்டிக்கப்படும்' என, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
- நமது நிருபர் -