'ரீல்ஸ்' பார்ப்பது 'ரியாலிட்டி' இல்லை! மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
'ரீல்ஸ்' பார்ப்பது 'ரியாலிட்டி' இல்லை! மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : ஆக 22, 2025 11:52 PM
சென்னை:''மாணவர்கள் தாங்கள் பார்க்கும், 'ரீல்ஸ்'களை எல்லாம், 'ரியாலிட்டி' என்று நம்பி விடக்கூடாது; தங்களின் ரோல் மாடலை, இன்ஸ்டாகிராமில் தேடக்கூடாது,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
சென்னையில் நடந்த, குட்ஷெப்பர்டு பள்ளி நுாற்றாண்டு விழாவில், அவர் பேசியதாவது:
ஒரு காலத்தில் கல்வி நமக்கு மறுக்கப்பட்டது. ஏராளமான போராட்டங்களுக்கு பிறகு, கல்வி கதவுகள் திறக்கப்பட்டன. இப்போதும் கல்விக்காக போராடும் மக்கள் இருக்கின்றனர்.
கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே, காலை உணவு திட்டம், நான் முதல்வன், தமிழ் புதல்வன் என, நிறைய திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
பள்ளி மாணவர்களுக்காக, சிறப்பு பஸ்களை துவக்கி உள்ளோம். இந்திய அளவில், பல மாநிலங்களில் வெறுப்புணர்வு துாண்டப்படுகிறது. அதற்கு அரசே துணை போகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு, இந்தியாவில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர். இது, எல்லாம் நிரந்தரமில்லை. இந்தியாவில் மத நல்லிக்கணத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் கொட்டம், அதிக நாள் நீடிக்காது.
ஜாதி, மத பிரிவினைகளை பார்க்காமல், எல்லோரையும் சமமாக நடத்தும் பண்பை, பள்ளிகளில் வளர்த்துக் கொள்ள வேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கக்கூடாது.
தமிழகம் எப்போதும் சமத்துவ பூங்காவாக, சகோதரத்துவத்துடன் திகழ, மாணவர்கள் இப்போதே, அந்த எண்ணத்துடன் வளர்ந்தால் தான் முடியும். அதனால் தான் பள்ளி நிகழ்ச்சியிலும் கூட, அரசியலும், அறிவுரையும் பேச வேண்டியதாக இருக்கிறது.
இன்றைக்கு அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்டது. தேவையான அறிவை பெற, நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏ.ஐ., தொழில் நுட்பம் இருக்கிறது. நாம் எதற்கு படிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எந்த கண்டுபிடிப்பையும் வளர்ச்சிக்காகவே பயன்படுத்த வேண்டும். அது சிந்தனையை சிதைக்க அனுமதிக்கக்கூடாது.
அதேபோல, மாணவர்கள் தங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடக்கூடாது. பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், மாணவர்கள் தாங்கள் பார்க்கும் ரீல்ஸ் அனைத்தையும், 'ரியாலிட்டி' என்று நம்பிவிடக்கூடாது.
லைக்ஸ், வியூவ்ஸ் பெறுவதில் கெத்து இல்லை. மார்க், டிகிரியில் தான் உண்மையான கெத்து இருக்கிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.