அரசு கட்டடத்திற்கு நீர்நிலைகளை தேர்வு செய்ய கூடாது: ஐகோர்ட்
அரசு கட்டடத்திற்கு நீர்நிலைகளை தேர்வு செய்ய கூடாது: ஐகோர்ட்
ADDED : அக் 09, 2024 01:37 AM
மதுரை:எதிர்காலத்தில், எந்தவொரு கட்டடம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும்போதும், நீர்நிலைகள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட வேண்டும்' என தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பழவூரில் நீரோடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர், சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிடக் கோரி, அருமைதாஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்தநீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: நுாறு நாள் வேலைத்திட்ட சேவை மையம் கட்டப்பட்டதே மனுதாரரை இந்த நீதிமன்றத்தை நாட வைத்துள்ளது.
ஓடையில் சமுதாய கூடம் கட்டும் பணி, 2015- - 16ல் துவங்கியது. இவ்வழக்கு தாக்கலானதை தொடர்ந்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இக்கட்டுமானத்தை அகற்ற வேண்டியது அவசியம். தவறிழைத்த அலுவலர்களிடமிருந்து, கட்டுமானத்திற்கான 14.55 லட்சம் ரூபாயை வசூலிக்கப்படுவதை கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும்.
பல சமயங்களில் அரசு கட்டடங்கள் நீர்நிலைகளில் அமைக்கப்படுவதை காண்கிறோம்.
எதிர்காலத்தில், எந்தவொரு கட்டடம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும்போது, அதற்கு நீர்நிலைகள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அதற்கான வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரிவான சுற்றறிக்கையை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் வெளியிட அறிவுறுத்துகிறோம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

