ADDED : டிச 10, 2025 06:28 AM

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு நிறுத்தப்பட்ட நீர் நேற்று மீண்டும் திறந்து விடப்பட்டது.
வைகை அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி தண்ணீர் தேவைக்காக டிச.5ல் வினாடிக்கு 650 கன அடி வீதம் ஆற்றின் வழியாக திறந்து விடப் பட்டது.
நேற்று முன்தினம் வத்தலகுண்டு அருகே ஆற்றில் விழுந்த நபரை மீட்பதற்காக வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக சென்ற நீர் நிறுத்தப்பட்டது.
மீட்புக்கு பின் நேற்று காலை 8:40 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது.
ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப் பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேறுகிறது.
நேற்று அணை நீர்மட்டம் 64.21 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி).
அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1565 கனஅடியாக இருந்தது.

