குடும்பத்தில் பிரச்னைகள் குறைய என்ன வழி? குடும்பத் தலைவிகளின் ஆலோசனைகள்
குடும்பத்தில் பிரச்னைகள் குறைய என்ன வழி? குடும்பத் தலைவிகளின் ஆலோசனைகள்
ADDED : மே 14, 2011 11:36 PM
சிரித்து மகிழும் வீட்டில், இறைவன் சந்தோஷமாக குடிகொண்டிருப்பான்.
அன்பான பெண்ணால் வீடு கோயிலாகும். கணவன், பிள்ளைகள், உறவினர்கள் முகத்தில் சந்தோஷப் புன்னகை பூக்கும். பிள்ளைகளை சான்றோனாக உருவாக்கும் கடமை பெண்ணுக்கே அதிகம். வீடு நன்றாக இருந்தால், நாடு தானாகவே நன்றாகி விடும். இன்று உலக குடும்ப தினம். குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் தன்னை கரைத்துக் கொள்ளும் கண்மணிகளாம், பெண்மணிகள் கூறும் ஆலோசனைகள் இதோ...
*÷ஷாபனா, இன்சூரன்ஸ் ஏஜன்ட், மதுரை : வருமானம் ஈட்டுவதில் ஆண்கள் திறமைசாலிகள் என்றால், குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண்கள் பொறுமைசாலிகள். கணவரின் சம்பளத்திற்குள் வீட்டுச் செலவையும், பிள்ளைகளின் கல்விச் செலவையும் கவனித்துக் கொண்டு சிக்கனத்தின் சிகரமாக திகழ்கின்றனர். பெண்களால் தான் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது என்பதே தவறு. திருமணமான புதிதில் மனைவி என்ன சொன்னாலும் சரி, சரியென தலையாட்டும் ஆண்கள் தான் பிரச்னைக்கு காரணம். மனைவி தவறாக சொன்னால், உடனடியாக அதை சுட்டிகாட்டி, மேலும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கணவனின் கடமை. தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக, பிரச்னைகள் பெரிதானபின் மனைவியால் தொல்லை, மாமியாரால் பிரச்னை என புலம்பக்கூடாது. ஒரு ஆண், மனைவியையும், தாயையும் சமமாக நடத்தினால் குடும்பத்தில் பிரச்னை வந்தாலும், உடனடியாக சரியாகிவிடும்.
*வாசுகி, அரசு ஊழியர், திண்டுக்கல்: எங்களுக்கு இரண்டு குழந்தைகள். நானும், கணவரும் வேலைக்கு செல்வதால் வீட்டில் காலையில் எழுந்தால், போர்களம் போல காட்சியளிக்கும். கணவர் வீட்டு வேலைகளில் உதவுவதால் எனக்கு டென்ஷன் குறைகிறது. இதனால் நானும் மனம் பிசகாமல் வேலைசெய்கிறேன். குழந்தைகளும் எங்களை புரிந்து கொண்டு, நன்றாக படிக்கின்றனர். எந்த பிரச்னை வந்தாலும் நானும், எனது கணவரும் பேசி தீர்வு காண்போம். வயதானவர்கள் எங்கள் வீட்டில் இல்லாதது குறையாகத்தான் இருக்கிறது. எனது வீட்டுக்கு எந்த உறவினர் உறவினர் வந்தாலும் ஒரே மாதிரியாக கவனிப்பதால் பிரச்னை இல்லை. குடும்பத்தில் 'ஈகோ' வை விட்டால், பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
*சித்ரா, குடும்பத்தலைவி, தேனி: இந்திய குடும்பத் தலைவிகளின் நிர்வாகத்திறனை உலகமே இப்போது ஏற்றுக் கொண்டுள்ளது. குடும்பத்தில் சேமித்தல், கணவனுக்கு உதவி செய்தல், நெருக்கடியின் போது மனோதைரியம் வழங்குவதும் குடும்பத்தலைவியின் முக்கிய பங்கு. ஆரோக்கியம் காப்பதில் பெண்களுக்கு நிகரில்லை. குழந்தைகளுக்கு கல்வியறிவோடு பண்பாட்டை கற்றுத் தருவதும் அன்னை தான். வாழ்க்கையின் அத்தனை அடிப்படை அம்சங்களும் குடும்பத்தலைவியைச் சுற்றியே அமைகின்றன. இதை புரிந்து பெண்கள் செயல்பட்டால், குடும்பம் பல்கலைகழகம் தான்.
*சுதா, குடும்பத்தலைவி, ராமநாதபுரம்: கூட்டு குடும்பத்தில் எனது தாயாரின் முயற்சியால் தான், அனைவரும் நல்ல நிலையில் உள்ளோம். நானும் நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டுள்ளேன். குடும்ப முன்னேற்றத்திற்கும், சிதைவிற்கும் பெண்ணே முதலும், கடைசியுமாக இருக்கிறாள். முன்பு கூட்டுகுடும்பம் இருந்தபோது எவ்வளவோ சாதனைகள் படைத்துள்ளனர். தனி குடும்பமாக இருந்தாலும் பெண்தான் விளக்கின் திரி போல் தூண்டுதலாகஇருந்து குடும்பத்தை நடத்துகிறாள். உறுதுணையாக கணவரும் இருந்தால் வாழ்க்கை தித்திக்கும்.
*யாஸ்மின், வருவாய்த் துறை அலுவலர், சிவகங்கை : குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்தை பராமரிக்கும் பொறுப்பு எங்களிடம் தான் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள், கணவர் வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி, குடும்ப பொருளாதாரத்தை பராமரிக்கின்றனர். எங்களது வீட்டை பொறுத்தமட்டில், குழந்தைகளின் வளர்ச்சி, குடும்ப தேவைக்கு செய்யவேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து இருவரும் கலந்து பேசி, நல்ல முடிவு எடுப்போம். இதனால் கருத்து வேறுபாடுக்கு வாய்ப்பில்லை. அதே நேரம் என் ஆலோசனையையும் மதித்து, சரியாக இருந்தால் பின்பற்றுகிறார். ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு ஆண், பெண் புரிதல் மிக முக்கியம்.
*ஜெயா, குடும்பத்தலைவி, விருதுநகர்: குடும்பம் என்பது புனிதமான உறவுகளுடன் கூடிய தேன் கூடு. கூட்டு குடும்பமாக இருந்தால் தான் அனைவருக்கும் நல்லது. பெரியவர்களின் அனுபவமும், இளையவர்களின் நிர்வாகமும் இருந்தால், குடும்பத்தை நல்ல முறையில் நடத்த முடியும். கூட்டு குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். குடும்பத்தின் சந்தோஷத்தை 'ஈகோ' கெடுத்துவிடும். கோபத்தை குறைத்து, நிதானமாக தங்களை பக்குவப்படுத்திக் கொள்ள பெண்கள் பழகவேண்டும். எந்த பிரச்னைகளையும் எளிதாக எடுத்துக் கொண்டு சமாளிக்க பழகினால், குடும்பம் மகிழ்ச்சியானதாக அமையும்.
நமது நிருபர் குழு

