மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்; நவாஸ்கனி எம்.பி., பேட்டி
மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்; நவாஸ்கனி எம்.பி., பேட்டி
ADDED : ஜன 25, 2025 04:56 AM
அவனியாபுரம் :   'திருப்பரங்குன்றத்தில் இரு மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்,' என நவாஸ்கனி எம்.பி., தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:  மலை மீது உள்ள தர்காவில் ஆடு கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இருப்பதையடுத்து, மதுரை போலீஸ் கமிஷனரை சந்தித்து விட்டு தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காகத்தான் அங்கு சென்றோம்.
சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு.
அங்குள்ள தர்கா வக்பு வாரியத்திற்கு சொந்தமானது.  மணப்பாறை எம்.எல்.ஏ.,அப்துல் சமது  வக்பு வாரிய உறுப்பினர்.  நான் தலைவர். அந்த தர்காவிற்கு செல்லக்கூடியவர்களுக்கு என்ன வசதிகள் குறைபாடுகள் உள்ளது என கேட்டு தெரிந்து அதை அரசிடம் தெரிவிக்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது.
தர்காவிற்கு செல்பவர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்களா. சைவம் சாப்பிடுகிறார்களா என்று இவர்கள் ஏன் கேட்கிறார்கள்.  அவர்களுடைய  கோயிலுக்கு போகவில்லை.
கோயில் வளாகத்திற்கு செல்லவில்லை.   போலீசார் ஆடு கோழிகளை கொண்டு செல்லத்தான் தடை,  சமைத்த சாப்பாடு கொண்டு செல்வதற்கு தடை இல்லை எனக் கூறினர். அவர்கள் சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்தார்கள்.  இது காவல்துறை அனுமதித்த செயல்.
நாங்கள் கைது செய்யப்பட வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். ஒரு எம்.எல்.ஏ.,  எம்.பி.,  ஆய்வு செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்.
சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை,  எச்.ராஜா போன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இப் பிரச்னையில் இரு மதங்களிடையே மத நல்லிணக்கம் ஏற்பட பேச்சு நடத்த நாங்கள் தயார் என்றார்.

