கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: காங்., அழகிரி
கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: காங்., அழகிரி
ADDED : நவ 13, 2025 07:03 AM

விருத்தாசலம்: கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது என, என முன்னாள் காங்., மாநில தலைவர் அழகிரி பேசினார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்த மேற்கு மாவட்ட காங்., செயற்குழு கூட்டத்தில், அவர் பேசியதாவது:
பா.ஜ., ராட்சத பலத்துடன் உள்ளது, நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்., அல்லாத முதல்வர்களில் ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார். ஸ்டாலின் நினைத்திருந்தால் பா.ஜ.,வை அரவணைத்து செல்லலாம். ஆனால், அதை தவிர்த்து ராகுலுக்கு துணையாக நிற்கிறார்.
பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பொய் பிரசாரம் செய்கின்றனர். தவறான கருத்துகளை திரும்ப திரும்பச் சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். எதிர்மறை கருத்துகளுக்கு அந்த இடத்திலேயே பதிலடி தர வேண்டும். நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்குபெற வேண்டும். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல.
முதல்வர் ஸ்டாலின் சிறப்பானவர். அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இந்த கூட்டணியை விரும்புகிறேன். அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும். அதுபோல், நாமும் வளர வேண்டும்.
ராகுல் வரலாறு என்ன. அவரை போல அரசியல் வரலாறு கொண்ட நபர்கள் யாராவது உள்ளனரா. கொள்கை தான் அவரது கோட்பாடு. ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார். அதுவரை காங்., கட்சியினருக்கு துாக்கம் வரக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

