சூழ்ச்சிகளை முறியடித்து எதிரிகளை வீழ்த்த வேண்டும்: பழனிசாமி
சூழ்ச்சிகளை முறியடித்து எதிரிகளை வீழ்த்த வேண்டும்: பழனிசாமி
ADDED : ஜன 19, 2025 02:53 AM
சென்னை:''எம்.ஜி.ஆர்., பெயரை உச்சரிக்காமல், யாரும் கட்சி நடத்த முடியாது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம் பெருங்குடி கண்ணிநகரில் நடந்தது. மாவட்ட செயலர்கே.பி.கந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர்., அவர் இருக்கும் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்கள்தான் மக்கள் மனதில் வாழ்வர். மறைந்தும் மக்களின் மனதில் வாழ்பவராக எம்.ஜி.ஆர்., இருப்பதற்கு காரணம் அவருடைய மக்கள் நலன் சிந்தனைதான்.
எம்.ஜி.ஆர்., எடுத்த எடுப்பிலேயே முதல்வராகி விடவில்லை. மக்களோடு மக்களாக பழகி, மக்களின் குறைகளை அறிந்து அரசியல் செய்ததால், மக்கள் அவரை ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வந்தனர்.
தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின், சட்டசபையில் எம்.ஜி.ஆர்., பேசியபோது, 'மைக்' இணைப்பை துண்டித்தனர்; செருப்பை வீசி எறிந்தனர். 'மக்களின் ஆதரவோடு வென்று, முதல்வராக சட்டசபையில் நுழைவேன்' என, எம்.ஜி.ஆர்., சபதம் செய்தார்; 1977ல் அதை செய்து காட்டினார்.
எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசு கிடையாது. இங்கு இருக்கும் நாம் தான் வாரிசு. இருவருக்கும் தமிழக மக்கள் தான் பிள்ளைகள். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறியதற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே காரணம்.
தி.மு.க.,வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோருக்குப் பின், இப்போது உதயநிதி மகனையும் அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க.,வில் தொண்டர்கள் தான் பிரதானம். அ.தி.மு.க.,வில் தலைமைக்கு விசுவாசமாக இருந்து உழைத்தால் யாருடைய வீட்டையும்தட்டி அவர்களுக்கு பதவி கொடுப்போம்.
அ.தி.மு.க.,வை சிறுமைப்படுத்த தொடுக்கும் எந்த வழக்கும் நிலைக்காது. சட்டப்படி, அ.தி.மு.க., நம் பக்கம் இருக்கிறது. எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து, அவர்களை வீழ்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.