ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தர்றோம்; பங்கேற்க இயலாது: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மீண்டும் போர்க்கொடி
ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தர்றோம்; பங்கேற்க இயலாது: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மீண்டும் போர்க்கொடி
ADDED : ஆக 13, 2026 07:12 PM

கோவை: 'அ.தி.மு.க., நாளை( ஆக.,14) நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தருகிறோம்; ஆனால், வேறு மாவட்டங்களுக்கு சென்று பங்கேற்க இயலாது' என, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தில் பயிர்க்கடனை முழுதாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுதும் அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ராமநாதபுரத்தில் நத்தம் விஸ்வநாதன், தேனியில் வேலுமணி, சேலத்தில் தங்கமணி, ராணிப்பேட்டையில் அன்பழகன் ஆகியோர் தலைமை வகிப்பர் என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஆனால், த.வெ.க., அரசை ஆதரிக்கும் மனநிலையில் உள்ள, விஸ்வநாதன் - வேலுமணி ஆகியோர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலாது என கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன் விபரம்:கருத்து வேறுபாடுகளால் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டோருக்கு, அவரவர் வகித்த மாநில, மாவட்ட உள்ளிட்ட கட்சி பொறுப்புகள் திரும்ப வழங்கப்படும் என பொதுச்செயலர் உறுதியளித்தார்; ஆனால், மீண்டும் வழங்கவில்லை. பழைய பொறுப்பை மீண்டும் வழங்குமாறு எழுத்துப்பூர்வமாக கூறியும், பதில் இல்லை.
இந்நிலையில், அ.தி.மு.க., நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், எங்களை புறக்கணிக்கும் வகையில், விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன் ஆகியோர் அவரவர் சொந்த மாவட்டங்களில் தலைமையேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதை தவிர்த்து, வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்கு நியமித்தது ஏற்புடையதல்ல.தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காக்கும் முயற்சியாக, அ.தி.மு.க., நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தருகிறோம். ஆனால், வேறு மாவட்டங்களுக்கு சென்று பங்கேற்க இயலாது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
