ADDED : அக் 23, 2024 12:18 AM
மதுரை:''யு டியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் இந்த முறை நடவடிக்கை எடுக்காமல் விடமாட்டோம்,'' என, மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில், 9.9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அதிநவீன கேத்லேப் ஆய்வகம், நுரையீரல் ஆய்வு கூடம் மற்றும் சமையலறை உபகரணங்கள் பயன்பாட்டை அமைச்சர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
அவர் அளித்த பேட்டி:
துபாயில் கருவின் பாலினம் வெளிப்படுத்தலாம்; தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தன் குழந்தையின் பாலினம் குறித்து துபாயில் ஸ்கேன் பார்த்த 'யு டியூபர்' இர்பான் கடந்த மே மாதம் வீடியோ வெளியிட்டார்.
அப்போது மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவை இயக்குனகரம் வாயிலாக நோட்டீஸ் அனுப்பிய போது மன்னிப்பு கேட்டார்.
இந்த முறை சென்னை ரெயின்போ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தைப்பேறு நிகழ்வை வீடியோவாக வெளியிட்டதோடு, குழந்தையின் தொப்புள்கொடியை அவரே வெட்டியுள்ளார்.
அறுவை சிகிச்சை அரங்கினுள் எத்தனை பேர் சேர்ந்து வீடியோ எடுத்தனர்என தெரியவில்லை. தேசிய மருத்துவ கமிஷன்சட்டம் 2021ன் படி டாக்டர் அல்லாத ஒருவர் தொப்புள் கொடி வெட்டுவது தவறு.
மருத்துவ சட்ட விதிகளை மீறிய இர்பான் மீது பிரிவு 34 - 1, 2ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீதும், மருத்துவமனை டாக்டர் நிவேதிதா மீதும் டி.எம்.எஸ்., வாயிலாக செம்மஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
டாக்டர் நிவேதிதா மருத்துவ சேவை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வாயிலாக சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும்விடமாட்டோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.