ADDED : ஜூலை 02, 2024 05:49 AM
அம்பாசமுத்திரம்:
''மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அழிக்க விடமாட்டோம். உங்களது வாழ்வுரிமையை மீட்டுத் தருவோம்,'' என, மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
தொழிலாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
பி.பி.டி.சி.,யின் குத்தகை காலம் முடிவடைந்தது என்றால், அந்த கம்பெனி மட்டும்தான் இங்கிருந்து வெளியேற வேண்டும். தொழிலாளர்கள் வெளியேற வேண்டியது இல்லை. உங்களை சட்டப்படியாக வெளியேற்ற இடமில்லை.
ஆசை வார்த்தை கூறி, விருப்ப ஓய்வில் செல்வது போல கையெழுத்து வாங்கியிருந்தால் அது செல்லாது. தேயிலை தோட்டங்களை அழிக்க விட மாட்டோம். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம், இத்தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்த வேண்டும்.
இல்லையெனில், தொழிலாளர்களுக்கு நிலத்தை பிரித்து வழங்க வேண்டும். சம்பள உயர்வுக்காக போராடிய நாங்கள், உங்கள் வாழ்வுரிமையை மீட்டு தருவோம். உங்களது வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.