ADDED : ஜன 03, 2025 11:13 AM

சென்னை: பெண்கள் நலன் காப்போம் என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் உறுதி அளித்துள்ளார்.
வேலு நாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் மலர்துாவி மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

