திமுகவை அகற்றி தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம்: அண்ணாமலை
திமுகவை அகற்றி தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம்: அண்ணாமலை
UPDATED : ஜன 22, 2026 09:25 PM
ADDED : ஜன 22, 2026 09:22 PM

சென்னை: ''ஊழல் நிறைந்த திமுக இயந்திரத்தை அகற்றி, நம்பகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம்'', என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுராந்தகத்தில் ஜனவரி 23ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கூட்டமானது சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைவதுடன், மாற்றத்திற்கான மக்களின் உறுதியையும், மாற்றத்தை ஏற்படுத்தும் நிர்வாகத்தையும் நிரூபிக்கும்.
இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. பல ஆண்டு தவறான ஆட்சிக்கு பிறகு தமிகத்திற்கான ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை மீட்டெடுக்கும் மாற்றத்திற்கான இயக்கம். ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் கூட்டணி நோக்கத்தில் ஒன்றுபட்டுள்ளது.
தேஜ கூட்டணி ஒரு வளமான எதிர்காலத்துக்காக தமிழகத்தின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாளைய பேரணி ஒரு தெளிவான செய்தியை அனுப்பும். வளர்ச்சியை மையமாக கொண்ட கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றால் இயக்கப்படும் இரட்டை இன்ஜின் அரசை தமிழகம் கோருகிறது. இந்த தொலைநோக்கு பார்வையை தேஜ கூட்டணி மட்டுமே நிறைவேற்ற முடியும். ஊழல் நிறைந்த திமுக இயந்திரத்தை அகற்றி, நம்பகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

