ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை 30 மாவட்டங்களில் காணோம்
ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளை 30 மாவட்டங்களில் காணோம்
ADDED : அக் 30, 2025 01:29 AM
தமிழகத்தில் லஞ்சம் வாங்கி பிடிபடும் அரசு அதிகாரிகள், சொத்து குவிப்பு வழக்குகளில் சிக்கியுள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க, எட்டு மாவட்டங்களில் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் அமைக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், அரசு துறைகளில் லஞ்சம் வாங்கி பிடிபட்ட அரசு அலுவலர்களின் மீதான வழக்குகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல், 100 வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. 2024 ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், அதன் விசாரணை அதிகாரம், தலைமை குற்றவியல் நீதிமன்றங்களில் இருந்து, முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது வழக்குகள் படிப்படியாக, முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.
தற்போது தமிழகத் தில், எட்டு மாவட்டங்களில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.
மற்ற, 30 மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப் படுகிறது.
அந்த நீதிமன்றங்களில் ஏற்கனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, லஞ்ச ஒழிப்பு வழக்குகளும் அங்கு மாற்றப்படுவதால் பணிச்சுமை அதிகரித்து, வழக்கு முடிவடைய தாமதம் ஏற்படுகிறது.
எனவே, இதுவரை சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாத அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்களும், வழக்குகளில் சிக்கியவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
- நமது நிருபர் -:

