திமுகவின் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்கு கொண்டு வருவோம்: இபிஎஸ்
திமுகவின் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்கு கொண்டு வருவோம்: இபிஎஸ்
ADDED : பிப் 21, 2026 10:20 PM

சென்னை: ஊழல் முறைகேட்டில் திமுகவினர் சம்பாதித்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்கு கொண்டு வருவோம் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் , 'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை கடந்த ஜூலையில் மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்கினார்.
இன்று 183வது தொகுதியாக அம்பத்தூரில் திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் அவர் பேசியதாவது:
இன்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி துரோகி என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். யார் துரோகி..? ஸ்டாலின் தான் துரோகி, கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டுக்கு செய்தது துரோகம். திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது, மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? மாணவர்களை, இளைஞர்களை பொதுமக்களை சீரழித்த துரோகி ஸ்டாலின்.
5 ஆண்டுகளும் கொள்ளையடிப்பதே குறிக்கோள்.
வேறு என்ன செய்தீர்கள்..?
இரண்டு நாள் முன் சட்டமன்றத்தில் 2 மணி நேரம் பேசினேன். ஸ்டாலின் வரவில்லை, ஒளிந்துகொண்டார். திராணி இருந்தால் பதில் சொல்லி இருக்கவேண்டும், முடியாது.
டாஸ்மாக் 10 ரூபாய் யாரு?
பாலாஜி, யாரும் மறக்க மாட்டாங்க. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். விஞ்ஞான முறையில் ஊழல் செய்தனர்.
இவ்வளவு ஊழல் செய்துவிட்டு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லாதவர் ஸ்டாலின். பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தினோம். தேர்வு நடத்தினோம். இப்படி அதிமுக ஆட்சியில் மகக்ளுக்குத் தேவையான உதவிகள் செய்துகொடுத்தோம். அதனால் தான் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று போற்றப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வரும்:
அடுத்த மாசம் தேர்தல் அறிவிப்பு வரும். ஏப்ரலில் தேர்தல் வருகிறது. இந்த 5 ஆண்டில் தினம் ஒரு திட்டத்துக்குப் பேர் வைப்பார், போட்டோ ஷூட் விளம்பரம் நடக்கும். இதுதான் நிலைமை.
என் மீது 4800 கோடி ஊழல் வழக்கு போட்டீங்க, என்மீது வழக்குப் போட்ட ஆர்.எஸ்.பாரதி திரும்ப பெறுவேன் என்று சொன்னார், நான் நடத்துகிறேன் என்று மறுத்துவிட்டேன்.
இதுவரை என்னை பற்றி பேசி பொய்யான கருத்தை பதியவைத்தார். அதனால் வழக்கை நடத்தினேன், நீதிபதியே ஏன் நடத்துறீங்க என்று கேட்டார். அப்போது, 'இந்தியாவிலேயே தன் மீது இருக்கும் வழக்கை நடத்துவேன் என்று சொன்ன முதல் முதல்வர் நீங்கள் தான்' என்று சொன்னார்.
தில்லுதிராணி இருந்தால் உங்கள் அமைச்சர் மீது வழக்குப் போட்டதை நீதிமன்றத்தில் சந்தியுங்கள். நான் நிரபராதி என்று சொல்லிவிட்டனர், உச்சநீதிமன்றத்திலும் நிரபராதி என்று தீர்ப்பு பெற்று உங்கள் முன்பு நிற்கிறேன். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
ஹவாலா மோசடியில் சிக்கிய நேரு:
உங்களுக்குப் பயம் வந்துவிட்டது. நேற்றைய முன்தினம் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு வந்துவிட்டது. பயம் வந்துவிட்டதால் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார்.
ஒருவர் 453 நாள் டாஸ்மாக் வழக்கில் சிறையில் இருந்தார். இப்போது அமைச்சர் நேரு ஹவாலா மோசடியில் சிக்கியுள்ளார்.
குடிநீர் வழங்கல் துறை நகர்ப்புற அமைச்சரிடம் இருக்கிறது. ஒரு பணியிடத்துக்கு 30 முதல் 35 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டுத்தான் முறைகேடாக பணியாணை வழங்கினார்கள். பல்வேறு பணிகளுக்கு கமிஷன் வாங்கப்பட்டதாக அறிக்கையில் கொடுத்துள்ளனர். ஊழல் நிறைந்த அரசு என்பதற்கு இதுவே சான்று.
அலங்கோல ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? :
ஒரு கேவலமான அரசு என்பதற்கு இதுவே உதாரணம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். நிர்வாகத் திறமையற்ற அரசு என்பதற்கு இதுவும் சான்று.
2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல் தியாகராஜன் 30 ஆயிரம் கோடியை கையில் வைத்துக்கொண்டு சபரீசன் உதயநிதியும் தடுமாறுகிறார்கள் என்று சொன்னார், அப்பவே 30 ஆயிரம் கோடி என்றால் இப்போது எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்து இருப்பார்கள்..? ஹவாலா பணம் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பியதெல்லாம் செய்தியில் வந்துள்ளது, இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சி மீண்டும் வரவேண்டுமா?
எங்கே ஒழிச்சீங்க..?:
நேற்று முன் தினம் நிதியமைச்சர் வறுமை ஒழிக்கப்பட்டது என்றார். எங்கே ஒழிச்சீங்க..? சரி, கடன் வாங்கி திட்டம் கொண்டுவந்தீர்களா? இல்லை. . அதிக கடன் வாங்கிட்டீங்க, திட்டம் இல்லை, எல்லாம் திமுக குடும்பத்துக்கும் ஹவாலா பணம் வெளிநாட்டுக்கும் போய்விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்குக் கொண்டுவருவோம்.
குடும்ப ஆட்சிக்கு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.
ஸ்டாலின் தொழில் முதலீடு ஈர்த்தோம் என்கிறார். அப்படிக் கிடைத்ததா இந்த நான்காண்டில்? முதல்வரே பச்சைப் பொய் சொல்கிறார்.
நான் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டேன். தொழில்துறை அமைச்சரிடம் வெள்ளை அறிக்கை கேட்டேன், வெள்ளை பேப்பரை எடுத்துக் காண்பித்தார். உண்மைதான் எதுவுமே செய்யவில்லை. செய்தால் தானே காட்ட முடியும்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

