ADDED : ஏப் 21, 2026 01:46 AM

சென்னை: 'தமிழகத்தில், இன்றும், நாளையும், வெயிலின் தாக்கம், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை, ராயல சீமா, தமிழக உள் மாவட்டங்கள் வழியாக வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், டெல்டா மாவட்டங்களில், இன்றும், நாளையும், பலத்த காற்றுடன், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில், இன்றும், நாளையும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. அதிக வெப்பம், ஈரப்பதம் காரணமாக, வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
