ADDED : ஆக 31, 2024 06:56 AM

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா, ஒடிசா நோக்கி நகரும் நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு வெப்பச்சலன மழை பெய்ய வாயப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது. இது, மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. அடுத்த, 36 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து, ஆந்திரா, ஒடிசா கரை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது புயலாக மாற வாய்ப்பு இல்லை.
இந்நிலையில், குளிர்ந்த காற்றின் தாக்கம் காரணமாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு வெப்பச்சலன மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று, இடி மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யலாம். இதனால், செப்., 5 வரை மிதமான மழை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மாவட்ட கடலோர பகுதிகள், வடமாவட்ட கடலோர பகுதிகளுக்கு அப்பால், இன்று முதல் செப்., 3 வரை மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.