ADDED : ஆக 20, 2024 06:45 AM

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 13 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
பெரம்பலுார், திருச்சி, சேலம், தேனி மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு, இது தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி மின்னலுடனும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.