வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு: 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு: 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'
ADDED : நவ 25, 2024 06:41 AM

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்றைய நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, தமிழகம், இலங்கை கரையை நோக்கி நகரும்.
இதனால், தமிழகத்தில் அனேக இடங்களில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 30ம் தேதி வரை மிதமான மழை தொடரும்.
இன்று
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று, 20 செ.மீ., வரை, மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுார், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று ஓரிரு இடங்களில், 11 செ.மீ., வரை, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழையும்; காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்...
வரும், 27ல், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், மிக கனமழையும்; சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.