ADDED : அக் 29, 2024 05:33 AM

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் காணப்படுகிறது.
இந்த மாற்றம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு, இதே நிலை நீடிக்கும்.
வரும் நவம்பர் 1ல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.