ADDED : டிச 05, 2024 05:42 AM

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிச.,10 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் அதிகாலை நேரத்தில், லேசான பனி மூட்டம் காணப்படும்.
புதுச்சேரி அருகே கரையை கடந்த பெஞ்சல் புயல், தற்போது கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பரவியுள்ளது. இத்துடன், அங்கு வளி மண்டல சுழற்சியும் இணைந்து காணப்படுகிறது.
இதனால், லட்சத்தீவுகள் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.