ADDED : மார் 05, 2026 03:43 AM
சென்னை: வனத்துறையில் ஆராய்ச்சி பணிக்காக, அரசு அமைத்துள்ள, ஆராய்ச்சி ஆலோசனை குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், வனத்துறை சார்ந்த, 28 புதிய ஆராய்ச்சி முன்மொழிவுகளுக்கும், பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ள, 14 ஆராய்ச்சி முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு, வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுப்ரியா சாஹு பேசுகையில், ''வனத்துறை ஆராய்ச்சி பணிகளில், இளைஞர்கள் பங்கேற்பை உறுதிப்படுத்த, இளம் ஆராய்ச்சியாளர்கள் மன்றம் ஏற்படுத்தப்படும். தேசிய அளவில் ஆராய்ச்சி உச்சி மாநாடுகளை, ஆண்டு தோறும் நடத்த வேண்டும்.
''சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த வர்த்தக தளம் உருவாக்கப்படும்,'' என்றார்.
வனத்துறை ஆராய்ச்சி பிரிவுக்காக, புதிய இணைய தளம் துவங்கப்பட்டு உள்ளது. மேலும், மூன்று ஆராய்ச்சி தொகுப்புகள், 11 ஆராய்ச்சி அறிக்கைகள் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

