ADDED : அக் 28, 2024 12:59 AM
மாநாட்டையொட்டி கடந்த இரண்டு நாட்களாக, விக்கிரவாண்டி டோல்கேட்டில் துவங்கி, வி.சாலை சித்தணி, கூட்டேரிப்பட்டு வரை, 5 கி.மீ., தொலைவுக்கு ஏராளமான சாலையோர கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் பாட்டில்களுக்கான தனித்தனி ஸ்டால்களும், ரேக்குடன் தனி நபர்களும் குடிநீர் பாட்டில்களை, 20 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்தனர்.
கடும் வெயில் காரணமாக லட்சக்கணக்கான குடிநீர் பாட்டில்கள் விற்பனையாகின.
சிப்ஸ், முறுக்கு, சோளம், பாப்கார்ன், டீ, காபி, வெள்ளரி, மாங்காய், சமோசா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஏராளமான தின்பண்டங்களும் தொடர்ச்சியாக விற்கப்பட்டன. இந்த தின்பண்டங்களை, லாரிகளில் லோடாக எடுத்து வந்து விற்றனர்.
ஒரு மாதத்துக்கான வியாபாரத்தை ஒரே நாளில் விற்று வருமானம் ஈட்டியதாக, தற்காலிகமாக கடை விரித்த வியாபாரிகள் தெரிவித்தனர். ஏராளமான சிறு கடைகளில் உணவு பொட்டலங்களும் விற்கப்பட்டன.
மாநாட்டு திடலில் குடிநீர் பாட்டிலும், சினாக்ஸ் பொட்டலங்களும் வழங்கப்பட்டாலும், மாநாட்டு திடலின் வெளியே போடப்பட்டிருந்த கடைகளில் தான், 75 சதவீதம் தொண்டர்களுக்கு பொருட்கள் விற்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்த விஜய் ரசிகர்கள், கிராமத்துக்கு ஒரு பஸ் வீதம், 15 பஸ்களில் மாநாட்டுக்கு வந்திருந்தனர். தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வந்த தொண்டர்கள், பிரியாணி செய்து அன்னதானம் வழங்கினர்.
விக்கிரவாண்டி, வி.சாலை, சித்தணி, கூட்டேரிப்பட்டு, திண்டிவனம் வரை உணவகங்களில், த.வெ.க., தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டதால், காலை முதல் மதியம் 2:00 மணிக்குள் உணவு பொருட்கள் விற்றுத் தீர்ந்தன.

