ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்: பின்னணி என்ன?
ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்: பின்னணி என்ன?
UPDATED : ஆக 27, 2025 02:05 PM
ADDED : ஆக 27, 2025 04:08 AM

சென்னை: பீஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடத்தில் பெயர் இருந்தவர்கள் என 65 லட்சம் பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. குற்றச்சாட்டு நாடு முழுதும் இதை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றன.
இதன் தொடர்ச்சியாக, 'வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து, பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது' என குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பீஹாரில் கடந்த 17ம் தேதி முதல் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் பங்கேற்கும்படி, 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீஹாரில் ராகுல் மேற்கொள்ளும் இன்றைய நடைபயணத்தில் பங்கேற்றார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று பாட்னா புறப்பட்டு சென்றார்.
நடைபயணத்தில் பங்கேற்ற பின், மாலை சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி, கடந்த 2023 ஜூன் மாதம், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் பீஹார் சென்றார். அதன்பின், இன்று தான் அங்கு செல்கிறார்.
நெருக்கடி
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது
என்ன தான் ராகுல் பிரசார நடைபயணத்தை மேற்கொண்டாலும், இண்டி கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். பீஹாரில் நடக்கும் ராகுல் நடைபயணத்தில் கலந்து கொள்வதன் வாயிலாக, ராகுலுடன் இணைந்து செயல்படுவதாக காட்டிக் கொள்வதோடு, தேர்தல் நெருக்கத்தில் தமிழக காங்., சார்பில் 'சீட்' ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் நெருக்கடி வரக்கூடாது. இதற்காகவே இந்தப் பயணத்தை ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ள விரும்பியே பீஹார் சென்றிருக்கிறார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.