ADDED : டிச 14, 2024 07:59 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் -- திருச்சி ரோட்டில் உள்ள சிட்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, 9:20 மணிக்கு மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீயிலிருந்து உருவான புகை மருத்துவமனை முழுதும் பரவியது.
நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் திணறினர். இதில், ஆறு பேர் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள், 32 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து தொடர்பாக, போலீசார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், பணியாளர்கள் உட்பட ஐந்து முக்கிய பேரிடம் விசாரணை செய்தனர்.
சிட்டி மருத்துவமனையில் ஸ்மோக் டிடெக்டர், அதிக வெப்பம் வந்தால் தண்ணீர் ஊற்றி அணைக்கும் கருவிகள் உள்ளிட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் இருந்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் உள்ளே இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அச்சமடைந்து தீத்தடுப்பு உபகரணங்களை உபயோகிக்காமல் வெளியே ஓடினர். அவர்கள் மின்கசிவு ஏற்பட்ட உடன், தீத்தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர்கள் பெரியசாமி, சுப்பிரமணியன், சக்கரபாணி சந்தித்து ஆறுதல் கூறினர்.
''மருத்துவமனை கட்டமைப்பில் உள்ள விதிமீறல் குறித்தும் விசாரிக்கப்படும். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.