ADDED : மார் 07, 2024 11:30 AM
சென்னை:கோவில், மலை போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க, அரசு எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவரும், வழக்கறிஞருமான சி.கனகராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், தமிழ் இலக்கியங்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரான கனகராஜ் ஆஜராகி, ''ரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில், தனி இடத்தில் கல்வெட்டுகளை வைத்து பாதுகாக்கின்றனர்,'' என்றார்.
இதையடுத்து, 'மலை, பாறை, கோவில் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், அதையும் வெட்டி எடுத்து விடுவர். இந்த விபரங்களை கனிமவளத் துறைக்கு தெரிவித்தால் தான், அந்த இடங்களில் குவாரிக்கு அனுமதி வழங்க மாட்டார்கள்' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
கல்வெட்டுகளை பாதுகாக்க, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 5 க்கு தள்ளி வைத்தது.
உள்ளூர் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்கு தனிக்குழு அமைக்கவும், இலங்கையில் இருந்து அகதிகளாக இங்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் கோரி, வழக்கறிஞர் கனகராஜ் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையையும் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

